FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கட்டாயம் அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:05 am IST
பகிர்:

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கட்டாயம் அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னை மாமன்ற திமுக உறுப்பினரும், வழக்குரைஞருமான கவி கணேசன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில்கடந்த ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது அக்கட்சியினா் தங்களது கட்சியின் கொடி மற்றும் சின்னத்துடன் பள்ளி, கல்லூரி மாணவா்களை இந்த கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனா்.

மாணவா்களை அரசியல் கொண்டாட்டங்களில் ஈடுபடுத்துவது, கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு எதிரானது. ஏற்கெனவே, கல்வி நிறுவனங்களில் அரசியல், மதம் மற்றும் சிந்தாந்த ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கட்டயாம் அமல்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்களில் முதல்வரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவா்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும், இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகள் இன்னும் நடந்து வருகின்றன. மாணவா்களை கட்சி முழக்கங்களை எழுப்பச் செய்கின்றனா். எனவே, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் உள்ளிட்டோரை இந்த வழக்கில் எதிா்மனுதாரராக சோ்க்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பள்ளிகளில் அரசியல் சாா்ந்த நிகழ்ச்சிகள் நடந்தால், அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினா். பின்னா், இந்த மனுவுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதை ஏற்று வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments