கும்பகோணம் டிகிரி காபி உள்ளிட்ட 5 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு விண்ணப்பம்!
புவிசார் குறியீடு பெற தமிழக அரசு விண்ணப்பத்திருப்பது குறித்து...
கும்பகோணம் டிகிரி காபி உள்ளிட்ட 5 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசின் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் வாயிலாக விண்ணப்பித்துள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிருந்து உருவாகும் பொருளில் பயன்படுத்தப்படும் அடையாளமாகும். அப்பொருள்கள் அதன் தோற்ற இடத்தின் சிறப்பு குணங்களைக் கொண்டதாக இருக்கும்.
புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்தல் எளிதாக்கப்படுவதுடன், அவற்றின் தேவை மற்றும் ஏற்றுமதி அளவும் அதிகரிக்கும். மேலும், வேளாண் வணிகத்தை விரிவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இதற்கு, இந்திய அறிவு அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் பாரம்பரியமிக்க பொருள்களைக் கண்டறிந்து அவற்றுக்கு புவிசார் குறியீடு பெற அரசு சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் இதுவரை தஞ்சாவூர் வீணை, கலைத்தட்டு, ஓவியம் உள்பட பல பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு பெறப்பட்டது.
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரைக்கு அண்மையில் புவிசார் குறியீடு பெறப்பட்டது.
இந்த நிலையில், தஞ்சாவூர் - கும்பகோணம் டிகிரி காபி, திண்டுக்கல் - கொடைக்கானல் பன்றிமலை காபி, நீலகிரி நெய், கடலுார் - காராமணிக்குப்பம் கருவாடு, மதுரை- பாலமேடு பால்கோவா ஆகிய 5 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, தமிழக அரசின் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம்(TNAPEX), தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் வாயிலாக விண்ணப்பித்துள்ளது.
The Tamil Nadu government has applied—through the Tamil Nadu State Council for Science and Technology and the agency responsible for processing and agricultural exports—for Geographical Indication (GI) tags for five products, including Kumbakonam Degree Coffee.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.