கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சி: திருமாவளவன்
கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சி என திருமாவளவன் பேசியது பற்றி...
கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சி என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (ஆக. 18) பேசினார்.
தவெகவுடன் விசிக கூட்டணி என வெளிப்படையாக அறிவித்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்தார்.
முதல்வரை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தவெக ஆட்சி வந்தவுடன் விசிகவின் குரல் குறைந்திறுக்கிறதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:
Advertisement
Advertisement
நாங்கள் நாங்களாகத்தான் இருக்கிறோம். எங்கள் வீரியம் எங்கேயும் நீர்த்துப் போகவில்லை. திட்டமிட்டு சிலர் எங்களுக்கு எதிராக ஒரு உளவியல் சிக்கலை உருவாக்குவதற்காக இதுமாதிரியான கருத்துகளைப் பரப்புகிறார்கள். இது வெறும் அவதூறு அவ்வளவுதான். எங்கெல்லாம் எங்கள் குரலை நாங்கள் உயர்த்த வேண்டுமோ, அங்கெல்லாம் நாங்கள் உயர்த்திக் கொண்டுதான் இருக்கிறோம். மக்களின் பார்வையிலிருந்துதான் எங்களது நிலைப்பாட்டை எடுக்கிறோம், எங்களது செயல்திட்டங்களை வரையறுக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் எங்களின் நலனிலிருந்தோ, கட்சியின் நலனிலிருந்தோ நாங்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. உரிய பிரச்னைகளில் எங்கள் குரலை நாங்கள் தொடர்ந்து எழுப்பி வருகிறோம்.
தவெகவோடு நாங்கள் கை கோர்த்திருக்கிறோம். தவெக ஆட்சியமைக்க எங்களுடைய ஆதரவை வழங்கினோம். அதனடிப்படையில் எங்களையும் அமைச்சரவையில் இணைத்திருக்கிறார்கள். தவெக உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளின் சார்பில், கூட்டணி அமைப்பது தொடர்பாக முதல் கூட்டம் நடந்தேறி இருக்கிறது. அதுகுறித்தும் தற்போது முதல்வருடன் நாங்கள் பேசினோம்.
இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு, அடுத்த கூட்டணிக் கூட்டத்தை நடத்த இருப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். தவெகவுடன் நாங்கள் இணைந்து 100 நாள்கள்தான் கடந்திருக்கின்றன. அவர்களுடன் தொடர்ந்து, இணைந்து பயணிப்போம். ஆளுங்கட்சியோடு பயணித்தோம். இனி ஆளுங்கட்சியாக பரிணமிப்போம் என்கிற முழக்கத்தை இந்த மாநாட்டில் நான் முன்வைத்திருக்கிறேன்.
கூட்டணி அரசில் நாங்கள் அங்கம் வகிப்பதன் மூலம், நாங்களும் ஒரு ஆளுங்கட்சி என்கிற அடையாளத்தைப் பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி. இந்த வளர்ச்சியை தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பப்படி, எங்களுடைய அரசியல் நிலைப்பாடு இருக்கும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
VCK leader and Member of Parliament Thirumavalavan stated today (Aug. 18) that, by being part of the coalition government, they too are considered part of the ruling party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.