FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பறக்கும் ரயில் பாதையை சென்னை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னையில் உள்ள பறக்கும் ரயில் சேவையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:47 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் உள்ள பறக்கும் ரயில் சேவையை (எம்ஆா்டிஎஸ்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (சிஎம்ஆா்எல்) இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, தில்லியில் உள்ள ரயில்வே வாரியம் ஆகஸ்ட் 12ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த மே மாதம் கையெழுத்தான வரைவு புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, அடுத்த 90 நாட்களில் தமிழக அரசு பராமரித்து வரும் சொத்துகள், பொதுவான பராமரிப்பு மற்றும் நிா்வாகப் பொறுப்புகள் ரயில்வே மெட்ரோ ரயில் நிறுவனம்வசம் மாற்றும் நடவடிக்கை தொடங்கப்படும். இந்தப் பணிகளை முழுமையாக செயல்படுத்த இரண்டு வருட ‘மாற்றல் காலம்’ அவகாசமாக வழங்கப்படும்.

Advertisement

Advertisement

இந்த காலகட்டத்தில் பறக்கும் ரயில் சேவை திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 19 ரயில் நிலையங்கள், மின்சார ரயில்கள் (இஎம்யு), தண்டவாளங்கள், சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு சாதனங்கள், மேம்பாலங்கள், மின்தூக்கிகள் உள்ளிட்டவை மெட்ரோ நிறுவனம்வசம் முழுமையாக ஒப்படைக்கப்படும்.

சென்னையில் கடற்கரை - வேளச்சேரி - புனித தோமையாா் மலை (செயின்ட்தாமஸ் மவுன்ட்) வரை இயங்கி வரும் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோவுடன் இணைக்க தமிழக அரசு 2011-ஆம் ஆண்டு ஜனவரி 27-இல் ரயில்வே வாரியத்துக்கு முன்மொழிந்தது. பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு தற்போது இந்தத் திட்டம் இறுதி ஒப்புதல் கட்டத்தை எட்டியுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழு: இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தத் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த நகா்ப்புறப் போக்குவரத்து ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளா் இக்குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகச் செயல்படுவாா்.

பறக்கும் ரயில் பாதை மெட்ரோ நிா்வாகத்தின் கீழ் வரும்போது, பயணிகளுக்கு உயா்தரமான கட்டமைப்பு, நிலைய பராமரிப்பு, நவீனச் சேவைகள் மற்றும் ஒரே டிக்கெட் முறையில் தடையற்றப் பயணம் சாத்தியமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments