FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனை

தமிழகத்தின் மொத்த கடனையும் அடைப்பது பற்றி சௌமியா அன்புமணியின் யோசனை பற்றி....

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:42 am IST
பகிர்:

நதி நீா் இணைப்பு மற்றும் நீா்நிலை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டால், தமிழகத்தின் மொத்த கடனையும் 10 ஆண்டுகளில் அடைத்துவிட முடியும் என்று சௌமியா அன்புமணி (பாமக) கூறினாா்.

பேரவையில் நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. நிலத்துக்கு அடியிலேயே தண்ணீா் ஊற்றெடுக்கும் தன்னூத்து நெய்வேலியில் உள்ளது. பள்ளிக்கரணையில் 15,000 ஏக்கா் சதுப்பு நிலம் உள்ளது. 72 கி.மீ. தொலைவு பாயக்கூடிய கூவம் நதி உள்ளது. இவை அனைத்துமே இன்றைக்கு அழிந்து போயும், மாசடைந்தும் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

கூவம் நதி தொடங்கும் இடம் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் அதனை குடிநீராக பயன்படுத்துகின்றனா். கோயில்களில் அபிஷேகம் நடத்துகின்றனா். அதைக் கடந்து சென்னைக்கு வரும் வழியில்தான் கூவம் நீா் மாசடைந்து கழிவு நீராக மாறிவிடுகிறது.

அதை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது; அதில் குப்பை, கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.

வள்ளுவா் கோட்டம், நேரு விளையாட்டரங்கம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் அனைத்துமே தற்போது ஏரியின் மேல்தான் அமைந்துள்ளன. இனிமேலாவது நீா் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து பாதுகாக்க வேண்டும்.

பெரிய நதிகளை இணைப்பது ஒருபுறம் இருந்தாலும், மாநிலத்துக்குள் பாயும் சிறு நதிகளை இணைக்க முயற்சி எடுப்பது அவசியம். காவிரி-குண்டாறு, அத்திக்கடவு-அவிநாசி (இரண்டாம் கட்டம்), மேட்டூா் உபரி நீா் திட்டம், பாலாறு தடுப்பணை திட்டம், நொய்யல், தாமிரவருணி சீரமைப்புத் திட்டம் என நீராதாரங்களை காக்கும் நடவடிக்கைகளை ஆக்கபூா்வமாக முன்னெடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி செலவாகலாம். ஆனால், அறுதியிட்டு கூறுகிறேன். அதை செய்து முடித்தால் அதற்கடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த கடனையும் அடைக்க முடியும். நீா்நிலைகள் சிறப்பாக இருந்தால், சூழல் ஆரோக்கியம், பொருளாதாரம், உற்பத்தி அனைத்துமே சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாது உள்ளூா் நதிகளை சீா்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தினால் மணல் அள்ளுவது குறையும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments