கர்பிணியாக இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி மரணம்! அதிர்ச்சி காரணம்
மூன்று மாத கர்பிணியாக இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி மரணமடைந்த விவகாரத்தில் விசாரணை.
புது தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள தனது வீட்டில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 30 வயதுடைய கர்பிணி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவருடைய கணவர் மற்றும் மாமியார், மாமனாரால் அப்பெண் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மத்திய பாதுகாப்புத் துறையில் உதவிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வந்த நஸ்யா கானம், கடந்த ஏப்ரல் மாதம் ஆசம் அலி கான் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் மூன்று மாத கர்பிணியாக இருந்தார்.
Advertisement
Advertisement
திருமணத்துக்குப் பிறகு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாக நஸ்யா, பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவோம், அடித்துக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது.
கணவரின் நடத்தை குறித்தும் நஸ்யா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்ததாகவும், அறிவுரை கூறியும் அவர் மாறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், 21ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நஸ்யா தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், தங்களது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டு, தற்கொலை நாடகம் ஆடுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இது குறித்து நஸ்யா கணவரிடம் விசாரணை நடத்தியபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அவர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார், கதவைத் திறக்க முயன்று பிறகு தாழ்பாளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.
உடல் கைப்பற்றப்பட்டு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.