முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:40 AM
பகிர்:

ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(பிப். 27) முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.

ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

எப்பொழுது... ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும்.. தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்....

ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ, எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்களோ,அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்....

இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள்தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையைதான் எண்ண வேண்டி இருக்கிறது...

ஓபிஎஸ்ஸின் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

OPS in the party that Jayalalithaa opposed all her life: Tamilisai soundararajan

முழு கட்டுரையைப் படிக்க →