தமிழகத்தை நரகமாக மாற்றிய திமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், “திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம். திமுக அரசு என்றாலே, ஓர் ஊழல் அரசு; கொடுங்கோல் அரசு. பெண்களுக்கு எதிரான ஓர் ஆட்சி, கஞ்சா ஆட்சி, சாராய ஆட்சி.
திமுக என்றாலே ஒரு பூஜ்ஜிய ஆட்சி. பூஜ்ஜிய அரசு; பூஜ்ஜிய நிர்வாகம். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்ப்பானசத் திட்டங்கள் பூஜ்ஜியம். திமுக அரசில் கொண்டுவரப்பட்ட புதிய மாவட்டங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், உருவாக்கப்பட்ட மருத்துவப் படிப்பு சீட்டுகள், கல்லூரிகளில் இணைப் பேராசிரியர்களின் சேர்க்கை, கொண்டுவரப்பட்ட புதிய மின்திட்டங்கள் என அனைத்தும் பூஜ்ஜியம்.
ஆனால், இந்தியாவிலேயே ஊழலில் மட்டும் முதலிடத்தில் திமுகவினர் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்தான். 5 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் 505 வாக்குறுதிகளை திமுக கொடுத்தது. அதில் வெறும் 66 வாக்குறுதிகளைத்தான் முழுமையாக நிறைவேற்றியுள்ளனர். ஆகையால், ஃபெயிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரலாமா?
ஆட்சிக்கு வந்தவுடன் நீட், கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக் கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம். 100 நாள் வேலைவாய்ப்பை 150 நாளாக உயர்த்துவோம் என்றெல்லாம் சொன்னார்கள்.
இவ்வாறு பொய்யான வாக்குறுதிகளால் தமிழகத்தை நரகமாக மாற்றிய திமுகவை விரட்டியடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.