குதிரை பேரம்! அதிமுக ராஜிநாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் கூடாது: இன்பதுரை எம்.பி.
அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படக் கூடாது என அதிமுக எம்.பி. இன்பதுரை புகார்
அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படக் கூடாது என அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்று, பின்னர் ராஜிநாமா செய்யப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் இன்பதுரை எம்.பி. புகார் மனு அளித்துள்ளார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "தேர்தல் ஆணையத்தில் தவெக அரசு, தனக்கான ஆதரவுத் தளத்தைச் செயற்கையாக உருவாக்குவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்டதால், தனக்கான ஆதரவைப் பெற தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது.
Advertisement
Advertisement
அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்த இடத்துக்கு முதல்வரே நேரில் சென்று குதிரை பேரத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அதிமுக கொறடா பேச்சை மீறி, 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், 21 எம்எல்ஏ-க்கள் மன்னிப்புகோரி கடிதம் எழுதியபோதிலும் 4 பேர் மன்னிப்பு கோரவில்லை. இந்த 4 பேரும் தவெகவில் இணைந்ததும் தவறு, அவர்களின் ராஜிநாமாவை அவைத்தலைவர் ஏற்றதும் தவறு.
இதனிடையே, மன்னிக்கப்பட்டவர்களில் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) இருவரும், அரசியலமைப்புச் சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.
இதனால், அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவால் 6 தொகுதிகள் காலியாகின்றன.
எம்எல்ஏ-க்கள் காலமானாலோ, தகுதியின்மை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களாலோதான் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், சர்ச்சைக்குரிய வகையில் காலியான தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்புக்கு எதிராக சி. விஜயபாஸ்கரும் எம்.ஆர். விஜயபாஸ்கரும் செயல்பட்டதால், அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். காலியான தொகுதிகளில் இப்போது கோடிக்கணக்கில் செலவாகும்.
வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து வாக்களிக்க வைத்துவிட்டு, தற்போது வேறு கட்சிகளில் இணைவது என்பது வாக்காளர்களை அவமதிப்பதுபோல்தான்" என்று தெரிவித்தார்.
No by-elections should be held for the constituencies vacated by AIADMK members, says Inbathurai MP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.