சமூக விரோத கும்பலுக்குப் பணிந்து அம்பேத்கர் சிலையை அகற்றிய அரசு நிர்வாகம்: வீரபாண்டியன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக...
சேலம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓதியத்தூர் ஊராட்சியில் 2021 ஆம் ஆண்டு அம்பேத்கர் சிலை ஒன்று பட்டியலின மக்களால் நிறுவப்பட்டது.
கால்மேல் கால் போட்டி அமர்ந்தவாறு இருக்கும் அந்தச் சிலை, அதன் அருகிலுள்ள ராஜிவ் காந்தி, காமராஜர் சிலைகளை அவமதிப்பதைப் போன்று இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அந்தச் சிலையை தகரம் வைத்து மூடியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அந்தச் சிலை மூடியிருந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் அந்தச் சிலையைத் திறப்பதற்கு அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 10 அன்று அம்பேத்கர் சிலையைச் சுற்றியிருந்த தகரம் அகற்றப்பட்டு சிலை மீண்டும் மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் அம்பேத்கர் சிலையை மூடவேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மீண்டும் சிலையை மூடவேண்டும் எனக் கூறிய நிலையில் பட்டியலின மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடி நடத்தினர். அதிகாலை வரை நடைபெற்ற வன்முறையால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வரைவு செய்து, அறிஞர்களும், தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் நிரம்பிய அவையில் முன் மொழிந்து, விரிவாக விவாதித்து, ஒரு மனதாக நிறைவேற்றறிட பெரும் பங்களிப்பு செய்தவர் பேரறிஞர் அம்பேத்கர்.
அவரது கம்பீரமாக காட்சியளிக்கும் வடிவில் அவரது சிலை ஒதியத்தூரில் அமைக்கப்பட்டது. சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலர் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பதற்றத்தை உருவாக்கி உள்ளனர்.
சட்டம் - ஒழுங்கை பராமரித்து, சாதி ஆதிக்க சக்திகளை ஒடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அந்த சமூக விரோதக் கும்பலுக்கு பணிந்து அம்பேத்கர் சிலையை அகற்றி விட்டது.
இந்தியாவின் மிகச் சிறந்த சமூக அறிஞரும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் சலிப்பறியாத போராட்டம் நடத்திய வருமான அண்ணல் அம்பேத்கரை குறிப்பிட்ட சாதி எல்லைக்குள் அடைத்து அடையாளப்படுத்தும் செயல் நாட்டுக்கே அவமானமாகும். இந்த மாபெரும் குற்றச் செயலில் ஈடுபட்ட சிலரை தவிர்த்து, ஒட்டு மொத்த சமூகமும் ஏற்றுக் கொண்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலையை அகற்றப்பட்ட, அதே இடத்தில் அரசு அமைத்துத் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Government administration yielded to an anti-social group and removed the Ambedkar statue: Veerapandian
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.