180 இடங்களில் விஜய் ஜெயிப்பார்: திமுகவுக்கு வைகோ சவால்?
தேர்தலில் தவெக 180 இடங்களில் வெற்றி பெறும் என வைகோ கூறியிருப்பது பற்றி...
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 180 இடங்களில் வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மதிமுகவின் சங்கொலி வார ஏடுவின் 30-ஆம் நிறைவு விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, "திமுகவும் அதிமுகவும் இரு மாபெரும் கட்சிகள். கோடிக்கணக்கான மக்களின் ஆதரவுபெற்ற கட்சிகள். இவர்களை யாராலும் அசைக்க முடியாது என்பதை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தகர்த்துத் தரைமட்டமாக்கி, தூள்தூளாக்கிவிட்டு முதல்வராகி இருக்கிறார் ஜோசப் விஜய்.
1993-ல் என் மீது சுமத்தப்பட்ட பழிகள்போல, நான் இருந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி (திமுக) கடந்த ஒரு வார காலமாக என் மீது பழிகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆயிரமாயிரம் கதைகளைத் தொடுத்தாலும், என்னை உங்களால் நெருங்க முடியாது.
Advertisement
Advertisement
எங்கே இருக்கிறேனோ அங்கே விசுவாசமாக இருப்பவன்தான் நான். கூட்டணி இருக்குமிடத்தில் விசுவாசமாக இருப்பவன் நான்.
இப்போது தீர்க்கமான முடிவெடுத்து, தவெகவுடன் கரம் கோர்த்திருக்கிறோம். ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்டிப் பார்க்காதீர்கள். பாஜகவுடன் உடன்பாடு வைக்கப் போகிறீர்களா?
நான் சவால் விடுகிறேன். தேர்தலில் 180 இடங்களில் விஜய் ஜெயிப்பார். ஊழலை வேரோடு கிள்ளி எறிந்து விட்டார் விஜய். இதனைவிட வேறு என்ன சாதிக்க வேண்டும்? ஊழலற்ற அரசை நடத்துவது மிகவும் கடினம்.
முன்னதாக ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுவந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர், தற்போது இந்த அரசைச் செயல்படுத்தவிடக் கூடாது என்று சில கோப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
மின்வெட்டால் ஒரு பெரும் பாதிப்பு ஏற்படவிருக்கிறது. இதனாலேயே இந்த ஆட்சி ஆடிப் போய்விடும். மின்வாரியத் துறையில் உங்கள் கட்சியைச் (திமுக) சேர்ந்த நிறையே பேர் இருக்கின்றனர் அல்லவா? நீங்களே பிரச்னையை உருவாக்குவீர்கள்; போராட்டங்கள், கிளர்ச்சிகளைக் கிளப்புவீர்கள். சிபிஐ விசாரணையையும் கேட்பீர்கள்.
நேர்மையை நிலைநாட்ட முயற்சிக்கும் ஓர் ஆட்சியைத் தூக்கியெறிய நினைக்கிறீர்கள். அப்படியொரு ஆபத்து நிகழுமானால், நேர்மைக்காகவே அரசியல் நடத்தும் நானும் என் இயக்கமும் முதல் ஆளாக வந்து நிற்போம்" என்று தெரிவித்தார்.
TVK will win in 180 constituencies, says MDMK Secretary Vaiko
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.