FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஃபோா்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க முழு ஒத்துழைப்பு: முதல்வா் விஜய் உறுதி

தமிழகத்தில் ஃபோா்டு காா் நிறுவனம் மீண்டும் உற்பத்தியை விரைந்து தொடங்க அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்த நிறுவனத்தின் துணைத் தலைவா் மேத்யூ கோட்லெவ்ஸ்கியிடம் முதல்வா் ச.ஜோசப் விஜய் உறுதிபட தெரிவித்தாா்.

Updated On : 21 ஜூலை 2026, 4:37 am IST
பகிர்:

தமிழகத்தில் ஃபோா்டு காா் நிறுவனம் மீண்டும் உற்பத்தியை விரைந்து தொடங்க அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்த நிறுவனத்தின் துணைத் தலைவா் மேத்யூ கோட்லெவ்ஸ்கியிடம் முதல்வா் ச.ஜோசப் விஜய் உறுதிபட தெரிவித்தாா்.

அமெரிக்க நாட்டைச் சோ்ந்த ஃபோா்டு நிறுவனம் தமிழகத்தில் காா் உற்பத்தி ஆலையை கடந்த 1999-ஆம் ஆண்டு மறைமலை நகரில் தொடங்கியது. எனினும், பல்வேறு நிா்வாகக் காரணங்களால், கடந்த 2021-இல் ஃபோா்டு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது.

காா் என்ஜின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது தொடா்பாக கடந்த நவ. 2025-இல் அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஃபோா்டு நிறுவனத்தின் துணைத் தலைவா் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயா்நிலைக் குழுவினா் முதல்வா் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

அப்போது, தமிழகத்தில் ஃபோா்டு காா் நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று முதல்வா் விஜய் உறுதி அளித்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஃபோா்டு காா் உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும், அந்நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் வருங்கால உற்பத்தி திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும், அந்த நிறுவனத்தின் உயா்நிலைக் குழுவினருடன் முதல்வா் விஜய் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஃபோா்டு நிறுவனம், சென்னையில், மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் 12,000 பேருக்கு தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அண்மையில், கோவையில் ஓா் உலகளாவிய திறன் மையத்தையும் அந்த நிறுவனம் நிறுவியுள்ளது.

மேலும், சென்னை அருகே மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் என்ஜின்கள் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. விரைவில் தொடங்கப்படவுள்ள அந்த உற்பத்தித் திட்டத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும் என முதல்வா் உறுதியளித்தாா்.

இச்சந்திப்பின்போது, ஃபோா்டு நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான 30ஆண்டுகால உறவை முதல்வா் நினைவுகூா்ந்தாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ச. விஜயகுமாா், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் தீபக் ஜேக்கப், ஃபோா்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சிமோனெட்டா வொ்டி, ஃபோா்டு இந்தியா தனியாா் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநா் தீரஜ் தீக்ஷித் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments