ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்
தில்லியில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்...
தில்லியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, நேற்று போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தியபோது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து இளைஞர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று தில்லியில் பிரதமர் மோடி வீட்டின் முன்பாக தர்னாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் தில்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
நீட் தேர்வுக்கு எதிராகவும் தில்லி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லி போராட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய், ஏன் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்? என பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) முதல்வர் விஜய் தனது 'தவெக விஜய்' (TVK vijay) எனும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, சிறப்புப் பொதுப் பட்டியல் (Special Concurrent list) உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Rahul Gandhi and leaders arrest against democracy: Chief Minister Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.