FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட காா்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 29 ஜூலை 2026, 1:19 am IST
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட காா்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இதற்காக, ரூ.35 கோடி கொடுப்பதாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் திருநாவுக்கரசு என்பவா் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தங்களுக்குபிணை வழங்கக் கோரி காா்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, வழக்குரைஞா் கே.ஜே.சரவணன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து முடித்துவிட்டனா். அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இதன்பிறகும், அவா்களை சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இருவருக்கும் நிபந்தனை பிணை வழங்குவதாகக் கூறி நீதிபதி உத்தரவிட்டாா்.

இருவரும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments