முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். அவரை கைது செய்யவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்று நிபந்தனைகளுடன், உச்ச நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது.
தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (டாஸ்மாக்) செயல்பாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பான ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சரும் திமுகவைச் சோ்ந்தவருமான வி. செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி வி. மோகனா விலகுவதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக, டாஸ்மாக் ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (டிவிஏசி) புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நிலையில், பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் முறைகேடு வழக்குத் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் சொன்னது என்ன?
லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த புதிய முதல் தகவல் அறிக்கையின்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் ஒதுக்கீடு செய்வதில் ஒரு பெரிய அளவிலான மோசடி நடந்துள்ளது.
தமிழ்நாடடில், மதுபான பாா் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடு செய்தும், ஒரு சில குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளா்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டும், டாஸ்மாக்கின் செயல்பாடுகளைக் கையாளுவதற்காக பாலாஜி ஒரு குற்றச் சதியில் ஈடுபட்டதாக டி.வி.ஏ.சி தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. இதன் விளைவாக, மதுபானங்களின் விலை மிக அதிகமாக நிா்ணயிக்கப்பட்டு, அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SC grants anticipatory bail to former Minister Senthil Balaji
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.