பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவு.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை(ஜூன் 2) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது.
கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பதிவுகளில், இணைய வழி மூலம் இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதில் சிறந்த விளையாட்டு வீரா் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின் முதல் கட்டம், இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 9 வரை சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தா அரங்கத்தில் நடைபெறுகிறது.
இதற்கான விரிவான கால அட்டவணை தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை 2026-இன் அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்னதாக வெளியிடப்பட்டது. மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள தனிப்பட்ட மாணவா்களுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டது.
விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தங்கள் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களுடன் (இரு நகல்களுடன்) நேரில் வருகை தர வேண்டும்.
பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆவணங்களை சமர்ப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 8 முதல் 20 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, ஜூன் 29 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது.
பொறியியல் படிப்புகளுக்கு தேவையான அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் நிகழாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிகழாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என எதிா்பார்க்கப்படுகிறது.