திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்! தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோ குற்றச்சாட்டு
திமுக கூட்டணி பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி...
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டதாகவும் தொண்டர்களின் ஆதங்கத்தையே துரை வைகோ வெளிப்படுத்தியதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
"நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்து பணியாற்றினோம். நான் 34 தொகுதிகளில் ஒவ்வொரு இடங்களிலும் ஒரு மணி நேரம் பேசி பிரசாரம் செய்ததால் 24 தொகுதிகளில் திமுக வென்றது.
Advertisement
Advertisement
திமுகவின் ஆதரவால்தான், திமுகவின் வாக்குகளால்தான் எங்களுடைய 2 பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். மற்ற 2 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எங்கள் பங்களிப்பும் எனது பங்களிப்பும் திமுக வெற்றிக்கு ஒரு சிறிய காரணமாக இருந்திருக்கிறது.
திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு 4 இடங்கள்தான் கொடுக்கப்பட்டது. அது எங்கள் தோழர்கள் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது என்று கூறினேன்.
தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விகிதம், அதிலும் அவர்கள்(திமுக) கட்சி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தம், அதில் ஒரு தொகுதியில் எங்கள் சின்னத்தில் போட்டியிட்டுக்கொள்ளலாம் என்று கூறி அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து, இறுதி நேரத்தில் நாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்று கூறினார்கள். அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
திமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ், ஒரு நன்றி கூட சொல்லாமல் தவெகவுடன் இணைந்து அமைச்சரவையிலும் இடம்பெற்றுவிட்டது. அதைப்போல, தேமுதிக 10ல் ஒரு இடம்தான் ஜெயித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றன.
நாங்களும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம் என்று நினைத்த ஆதங்கத்தை துரை வைகோ வெளிப்படுத்தியுள்ளார். இதை நான் பெரிதாக எங்கும் சொல்லிக்கொண்டதில்லை.
எதுவாயினும் தொண்டர்கள், நிர்வாகிகளின் மனதில் இருக்கும் கருத்துகள் ஜூன் 27 ஆம் தேதி பொதுக்குழுவில் பரிமாறப்படும்.
மற்ற கட்சிகள் அவர்கள் சின்னத்தில் போட்டியிட்டு தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற நிலைக்கு நாங்கள் செல்லவில்லை. அதுபற்றிய ஆதங்கத்தைதான் துரை வைகோ வெளிப்படுத்தியுள்ளார். அவ்வளவுதான். மற்றபடி நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவசரமாக எந்த முடிவும் எடுக்க மாட்டோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி பேசுவோம். தற்போது எதிர்கால திட்டங்கள் பற்றி பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும்" என்றார்.