கோவை சிறுமி பாலியல் கொலை: கார்த்திக், மோகன்ராஜுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்
கோவை சிறுமி பாலியல் கொலையில் கைதான கார்த்திக், மோகன்ராஜ் இருவருக்கும் 3 நாள்கள் போலீஸ் காவல்
கோவை: சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
கைது செய்யப்பட்ட கார்த்தி ஸ்ட்ரக்சரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
Advertisement
Advertisement
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்தனர்.
கோவை போச்சோ நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர். நீதிபதி பகவதி அம்மாள் மூன்று நாள்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.
நீதிமன்ற விசாரணைக்குப் பின் மோகன்ராஜ் வெளியில் அழைத்து வரப்பட்டார். முகமூடி அணிந்தபடி காவல்துறையினர் அவரை வெளியில் அழைத்து வந்தனர்.
கால் முறிவு ஏற்பட்ட கார்த்திக் ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்து வெளியில் அழைத்து வரப்பட்டார். இருவரும் வெவ்வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில், 10 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, தென்னைத் தோட்டத்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (30) ஆகிய இருவரைச் சூலூர் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டிருந்தனர்.