பாஜக நிர்வாகி புகார்: திருச்சி சூர்யா கைது!
பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டது பற்றி...
பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராக இருப்பவர் அலிசா அப்துல்லா. இவர், நாட்டின் முதல் பெண் மோட்டார் பந்தய சாம்பியனும் ஆவார்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை புதன்கிழமை நேரில் சந்தித்த அலிசா அப்துல்லா, தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா வெளியிடுவதாக புகார் அளித்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக வெளியான விடியோவில் என்னையும் என் குழந்தைகளையும் அவதூறாக விமர்சித்து இருவரும் பதிவிட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், திருச்சியில் வைத்து சூர்யாவை சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா, பெண் நிர்வாகியிடம் தொலைபேசியில் அவதூறாக பேசியதாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டில், பாஜகவில் இருந்து 2024-ல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.