ஆக்கும் சக்தி திமுக, அழிக்கும் சக்தி தவெக: முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு!
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி அளித்த பேட்டியில்..
தமிழ்நாட்டில் எங்கும் ஒரு நம்பர் லாட்டரி, 4 நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகத் தமிழக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ராணியார் அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு வியாழக்கிழமை காலை தங்க மோதிரம் அணிவித்த அவர் பேட்டியளித்தார்.
தமிழ்நாட்டின் எந்தக் கோரிக்கை குறித்து பிரதமரிடம் பேசினேன் என்பதையோ, மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகவோ, விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் அதிருப்தியில் போராட்டம் நடத்திவருவது பற்றியோ முதல்வர் விஜய் பேசாமல், காட்டுக்கூச்சல்தான் போடுகிறார். சினிமா படப்பிடிப்பு போலத்தான் இன்னமும் இருக்கிறது.
Advertisement
Advertisement
திரைப்படப் படப்பிடிப்பு பொதுவாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அவசரம் என்றால் 8 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். இந்த கால்ஷீட் அடிப்படையில்தான் முதல்வர் விஜய் தற்போது ஆட்சிப் பணியையும் பார்க்கிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சம்பவங்கள் எண்ணிலடங்கா அளவில் நடந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை.
ஒரு நம்பர் லாட்டரி, 4 நம்பர் லாட்டரி தமிழ்நாட்டில் எங்கும் தாராளமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் சுரண்டி சுரண்டி தங்களின் வருமானத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் கண்ணீரைத் துடைக்கும் ஆட்சி எனச் சொல்கிறார்கள். உழைக்கும் மக்கள் நிச்சயமாகப் பாடம் புகட்டுவார்கள்.