நமது கட்சியில் நிரந்தர பதவி ஒழிக்கப்படும்! அண்ணாமலை
தமிழ்நாட்டில் இன்னொரு அரசியல் கட்சி தேவையா? என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில்...
புதிதாக தொடங்கப் போகும் கட்சியில் யாருக்கும் நிரந்தர பதவி முறை ஒழிக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் உரையாற்றியபோது, தமிழ்நாட்டில் இன்னொரு அரசியல் கட்சி தேவையா? என்று தொண்டர் ஒருவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
அதற்கு பதிலளித்து அண்ணாமலை பேசியதாவது:
”கண்டிப்பாக தேவை. ஒரு பொருளை வாங்க பத்து கடைகள் ஏறி, விலை தரத்தை பார்த்து வாங்குகிறோம். அதுபோன்று நமது இயக்கம் கட்சியாக மாறும்போது, மக்கள் நமது தரத்தை பிரித்து முடியும்.
நமது கட்சியில் அனைவரும் சாமானியர்கள்தான். யாரும் தூரத்தில் இருந்து கையசைக்கப் போவதில்லை. பக்கத்து வீட்டுக்காரர் போன்றுதான் இருப்பார்கள். கட்சி தொடங்கிய முதல் நாள் முதலே அப்படிதான் இருக்கப் போகிறோம்.
சமரசம் இல்லாத கொள்கை கொண்ட சாமானியர்களுக்கான கட்சியாக இருக்க வேண்டும். பல தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும். ஒரு முதல்வர், 35 அமைச்சர்களால் அனைத்தையும் மாற்ற முடியுமா என்றால், கண்டிப்பாக முடியாது. 234 எம்.எல்.ஏ.க்களாலும் மாற்ற முடியாது. 30,000 க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் நேர்மையான திறன்பட்ட தலைவர்களால்தான் மாற்ற முடியும்.
அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் வகையில் மாற்றம் வேண்டும். நான் உள்பட ஒருவர் எத்தனை முறை எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் இருக்க வேண்டும் என்ற வரையறை கொண்டு வரவேண்டும்.
நிரந்தர தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி., என்பது ஒழிக்கப்படும். இயக்கத்தின் முதல் உறுப்பினரான எனக்கும் அது பொருந்தும். இந்த இயக்கம் கட்சியாக மாறும் முதல் நாளில் இது உறுதி செய்யப்படும்.
நம்மை தாண்டி இந்த இயக்கம் நிற்க வேண்டும். இதனால்தான், இது நம்ம இயக்கம் (We the Leaders) என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவையில் இது நம்ம இயக்கத்தின் கீழ் இயங்கும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரசியல் மையத்தை தொடங்கியுள்ளோம். நமது கட்சி சார்பில் உள்ளாட்சி முதல் எம்.பி. வரை எந்த தேர்தலில் போட்டியிட விரும்பினாலும், இந்த அமைப்பில் பயிற்சி பெற்ற பிறகுதான் போட்டியிட முடியும்.” எனத் தெரிவித்தார்.