இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 6) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "நம்மைப் பொருத்தவரையில் வெற்றி - தோல்வி என்பது மாறிவரும். அதற்காக வெற்றியைக் கண்டு, நாம் என்றைக்குமே வெறிகொண்டு அலைவதில்லை. தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் பணியாற்றுபவர்கள்தான் திமுகவினர்.
Advertisement
Advertisement
நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போது ஆட்சி நடப்பதே, நம்முடைய தயவில்தான் நடந்து கொண்டிருக்கிறது.
ஏனெனில், நாம் வெற்றிபெற வேண்டும், திமுக தரப்பிலிருந்து ஆட்சியமைய வேண்டும், எதிர்க்கட்சிகளெல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில்தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம்.
நம் கூட்டணியிலிருந்த கட்சிகளின் தயவில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்வது என்னவென்றால், கூட்டணியில் இணைவதற்கு முன்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சொல்லிவிட்டதாகக் கூறினர்.
அவர்கள் செல்வதாகக் கூறியபோது, நீங்கள் செல்லுங்கள், உங்கள் விருப்பம். நான் தடுக்க மாட்டேன்.
நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது. அதன் மூலமாக பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன்.
ஆகவே, நம்முடைய தயவுடன் வந்திருக்கும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் பணியாற்ற உறுதியேற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்தார்.