அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!
அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-வுக்கு வாழ்த்துகள் குவிந்து வருவதைப் பற்றி...
தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. இளங்கோவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தாங்கள் மற்றும் தங்களது உறவினர்களுக்கு உடல் பரிசோதனை, சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்வார்கள் என்றும், அவர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவான இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ள சம்பவம் பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல்முறையாக போட்டியிட்டு 69,971 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரைத் தோற்கடித்திருந்தார். இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர்.
எம்.எல்.ஏ. இளங்கோவனின் மகள் தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
பள்ளிகளுக்கு புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில், அவரது மகளை எம்எல்ஏவாக தேர்வான பின்பும் திருப்புவனம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து கல்வியைத் தொடரச் செய்துள்ளார் எம்.எல்.ஏ. இளங்கோவன்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. இளங்கோவன் கூறுகையில், “தான் அரசுப் பள்ளியில் படித்ததாகவும், தனது மகளும் அரசுப் பள்ளியிலேயே கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக”வும் அவர் தெரிவித்தார்.
திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று எம்.எல்.ஏ., இளங்கோவன், மனைவியுடன் சென்று, மகளை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கான தேவைகள் குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார்.
Appreciation is pouring in for Ilangovan, an MLA from the Tamizhaga Vettri Kazhagam, for enrolling his daughter in a government school.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.