FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 12 ஜூன் 2026, 10:13 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 

ஆண்டுதோறும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி), அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜுன் 12-ஆம் நாளன்று திறப்பது வழக்கமாகும். 

இந்நிலையில், நடப்பு தென்மேற்குப் பருவத்தில்  ‘எல்நினோ’ எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி (நீர் இருப்பு: 41.52 டிஎம்சி) மட்டுமே உள்ளது.  எனவே, இன்று (ஜுன் 12) மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது.  

இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் (Filter Points) மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கார் / குறுவை / சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.  

இதன்படி, வடிமுனைக் குழாய்களைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ரூ. 77.50 கோடி நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ. 57.33 கோடி நிதி ஒதுக்கீடும் என மொத்தம் ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 

இத்திட்டத்தில், நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு ரூ. 134.83 கோடி நிதி ஒதுக்கீடாக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், நீர் மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும்.

மேலும், வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் ரூ. 10 கோடி செலவில் தூர் வாரப்பட்டுள்ளன.  மேலும், நீர்வளத்துறை மூலமாக ரூ. 100 கோடி செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள  A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.  

மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும்.

எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு முதல்வர் சி. ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

summary

Chief Minister C. Joseph Vijay has announced that a special 'Kuruvai' package scheme, worth rs. 134.83 crore, will be implemented in both delta and non-delta districts to encourage Kuruvai paddy cultivation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments