சேலத்தில் பெண்களை மிரட்டி விடியோ எடுத்தவருக்கு அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! - கனிமொழி வலியுறுத்தல்!
சேலத்தில் பெண்களை மிரட்டி விடியோ எடுத்தவருக்கு அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டுமென திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தல்...
சேலத்தில், பெண்களை மிரட்டி விடியோ எடுத்த நபர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில், 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி விடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஆளுங்கட்சியான தவெகவின் பிரமுகர் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இதற்குப் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்யவேண்டுமென திமுக துணைப் பொதுச்செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி, அவர் இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“சேலத்தில் தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனையை தவெக அரசு பெற்றுத் தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.