அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து இன்னும் பல உறுப்பினர்கள் தவெகவில் இணைவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் பேசியது குறித்து...
அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என்றும் இன்னும் பல உறுப்பினர்கள் தவெகவில் இணைவார்கள் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூன் 14) தெரிவித்தார்.
மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா மதுராந்தகத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
Advertisement
Advertisement
''புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி உடன் பயணம் மேற்கொண்ட நான், தற்போது தளபதி உடன் பயணித்து வருகிறேன்.
உயிருள்ளவரை தமிழ்நாட்டின் முதல்வர் என்ற வரலாற்றைப் படைத்தார் ஜெயலலிதா. இதேபோன்று தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றை விஜய் படைப்பார்.
எதிர்க்கட்சித் தலைவரை விரட்டி அடித்த பெருமை தவெகவுக்கு வந்துசேரும். மக்களால் தூக்கியடிக்கப்பட்டவர்கள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்கிறது என்று சொன்னால், அதனை முறியடிக்கக் கூடிய தகுதி தளபதி விஜய்க்கு உண்டு.
பாக்கெட்டில் நான் ஜெயலலிதா படம் வைத்துக்கொண்டிருப்பது வழக்கம். தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்று அனுமதித்த ஒரே தலைவர் விஜய்.
கட்சிக்காக 42 ஆண்டுகள் ஓடிய பிறகும் தூக்கி அடிக்கப்பட்ட என்னை, தாங்கியவர் விஜய். பழமையை மறந்துவிட்டதால் எடப்பாடி பழனிசாமி தேய்ந்து வருகிறார்.
அதிமுக மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அக்கட்சியில் இருந்து இன்னும் பல உறுப்பினர்கள் தவெகவில் இணைவார்கள்'' என செங்கோட்டையன் குறிப்பிட்டார்.