பெரம்பூர் தொகுதி: முதல்வர் விஜய்க்கு எதிராக 3 பேர் தேர்தல் வழக்கு
சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு எதிராக மூன்று பேர் தேர்தல் வழக்கு தாக்கல்
சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு எதிராக மூன்று பேர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது.
இந்த நிலையில், தேர்தல் முடிந்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளில் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 16 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்குகளும் அடங்கும்.
Advertisement
Advertisement
முதல்வரும் தவெக தலைவருமான விஜய், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, அவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகிய மூவரும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வாக்காளர் சிவராஜ் என்பவரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ மருது கணேஷ் என்பவரும், திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் வெற்றிக்கு எதிராக வாக்காளர் பெரியசாமி உள்பட சுமார் 16 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.