உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம் வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவித்துள்ளது.
சென்னை: நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியம் வழங்கப்படும் என்று மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
உணவு தயாரிக்கும் உணவகங்கள் எரிவாயுவுக்கு பதிலாக மின் அடுப்பு பயன்படுத்தியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மின்சார மானியமாக யூனிட்டுக்கு ரூ.2 சலுகை அறிவித்துள்ளது தமிழக அரசு.
மேலும், தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவின்றி மாற்று எரிவாயுவை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
தமிழகத்தில் சிலிண்டர் தேவை, கையிருப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எரிவாயுவுக்கு பதில் மின் அடுப்பு பயன்படுத்துவதற்காக யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியமாக வழங்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு இருக்கும் வரை இந்த சலுகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்வது தொடர்பாக பலதரப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உணவகங்களில் எதற்காக மின் பயன்பாடு அதிகரித்தது என்று ஆராயப்படாது என்றும் சென்னையில் மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25 சதவிகிதம், அதிகபட்சமாக ரூ.3.05 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். நாடடில் உள்ள 60,698 தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவின்றி மாற்று எரிவாயுவைப் பயன்படுத்தலாம்.
பொது விநியோகத் திட்டத்தில் 3228 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடையூறின்றி 194 உழவர் சந்தைகளில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்யலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.