துரந்தர் - 2 படத்திற்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
துரந்தர் - 2 படத்திற்குத் தடை விதிக்கக் கோரிய முறையீடு பற்றி...
ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்த திரைப்படம் துரந்தர். இந்திய உளவாளி பாகிஸ்தானில் உளவு பார்க்கச் செல்வது பற்றிய கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் பாகம் பான் இந்திய மொழிகளில் வெளியான நிலையில் 4 நாள்களில் ரூ. 761 கோடி வசூல் செய்து இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
முதல் பாகத்தில் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான நேரடிக் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பிரதமர் மோடி சார்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பேசும் காட்சிகள் நேரடியாக படத்தில் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் மோடியின் விடியோ படத்தில் இடம்பெறுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வில் ஆஜரான வழக்குரைஞர் ஷீலா, துரந்தர்-2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கக் கோரி முறையிட்டார்.
அதில், திரையரங்குகளில் வெளியாகி உள்ள துரந்தர்- 2 படத்தில் அரசியல் தொடர்பான ஒரு சார்பு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்குப் பின்னர் இப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார்.
இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.
Appeal filed in the High Court seeking a ban on the film Durandhar-2
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.