கபாலீஸ்வரர் கோயிலில் பூஜை..! நாளை பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!
சென்னையில் நாளை பிரசாரத்தை தொடங்கிறார் இபிஎஸ்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை மாலை தரிசனம் செய்தபிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமாக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையொப்பமாகும் எனத் தெரிகின்றது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை 4 மணிக்கு பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை மாலை தரிசனம் செய்துவிட்டு, அந்த தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.