ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!!
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு...
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement
இதனிடையே நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்ய நேற்று தேசிய தலைமையுடன் காங்கிரஸ் நிர்வாகிகளின் காணொலி கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக தேசிய தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
அதேபோல வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
இதன் மூலமாக தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 5 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவளிப்பார்கள் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்ட ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசை அமைப்பதற்கான மிகத் தெளிவான, வலுவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகத்தையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது, இந்தியாவில் மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசியலின் அடையாளமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்தத் தீர்ப்பை மதிப்பதும், அதனை நிலைநிறுத்துவதும், அதனைச் செயல்படுத்த உதவுவதும் நமது அரசியலமைப்பு கடமையாகும். அதற்கிணங்க, தமிழக காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தங்களது முழு ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளன.
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத, எந்தவொரு வகுப்புவாத, மதவாத சக்தியையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை முன்வைக்கிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழக காங்கிரஸுக்கும் இடையிலான இந்தக் கூட்டணியானது, வரும் ஆண்டுகளிலும் தொடரும். தந்தை பெரியாரின் சமூக நீதி கோட்பாடுகள், டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பு கோட்பாடுகளின் மீது உறுதியாக இருந்து, காமராஜரின் பொற்காலத்தை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டுவரப் பாடுபடும்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, உரிய பங்களிப்பு மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இந்தக் கூட்டணியானது, தற்போதைய அரசு மட்டுமின்றி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும்.
ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான அரசை அமைப்பதற்கான தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்போம். தமிழ்நாட்டு மக்களின் - குறிப்பாக இளைஞர்களின் - கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் விஜய், ராகுல் காந்தி இருவரும் இணைந்து உறுதியளிக்கின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congress support for TVK to form govt in tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.