தொகுதி மறுசீரமைப்பு - திமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியவை...
மத்திய அரசு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து இன்று கலந்தாய்வு நடத்த தமிழக எம்.பி.க்களுக்கு முதல்வா் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கட்சி தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ளவே எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்ட தவெகவுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறினார்.
அவர் பேசுகையில், “மேகதாது பிரச்னைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டுமென நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனாலும், அதற்கென கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார்.
Advertisement
Advertisement
மேகதாது - காவிரி பிரச்னை தமிழ்நாட்டிலுள்ள மையப் பிரச்னை. இது தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னை ஆகும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சட்டமசோதா கொண்டு வருவது பற்றி மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில் அந்தப் பிரச்னை தொடர்பாக எம்பிக்கள் கூட்டத்தை கூட்டுவதன் தேவை என்ன? இதனால் என்ன நடக்கும்? நீங்கள் எம்.பி.க்களை மட்டும் அழைக்காமல் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து இதுதொடர்பாக விவாதம் செய்யுங்கள்.
இந்தக் கூட்டம் தொடர்பாக பாமகவின் கருத்து என்னவென்றால், காங்கிரஸ் கட்சி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து திமுகவின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளவே இந்தக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது. இது எங்களின் கருத்து மட்டுமல்ல. பொது அரசியல் தெரிந்தவர்களின் கருத்து.
மேகதாது பிரச்னையில் இப்போது காவிரியில் தண்ணீர் வந்துவிட்டது என்பதால் அமைதியாக இருந்துவிடக்கூடாது. இன்னும் பல சிக்கல்கள் இதில் உள்ளன. இதனைக் கையாள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தவேண்டும். அதில் என்ன ஈகோ என்று புரியவில்லை. சட்டப்பேரவையில் இதற்கென தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால் போதுமா? சட்டப்போராட்டங்கள் தொடர்பாக எங்களது கருத்துகளைக் கேட்கவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Constituency Delimitation: Congress Pressures TVK to Reveal DMK's Stance – Anbumani Ramadoss
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.