இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டி
இடைத்தேர்தல், புதிய தலைமைச் செயலகம், முதல்வரின் லண்டன் பயணம் குறித்து அன்புமணி கருத்து...
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக். 6 ஆம் தேதி வாக்குப்பதிவும் அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப். 16) கடைசி நாளாகும்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய பாமக தலைவர் அன்புமணி,
"மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. மற்றபடி யாருக்கு ஆதரவு என்ற எங்களின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஒரு மாநிலத்தின் முதல்வர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இங்கு சில மாநாடுகளை நடத்த வேண்டும், மேலும் வெளிநாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதன்படி, முதல்வர் விஜய்யும் லண்டனுக்குச் சென்றிருக்கிறார்.
ஆனால் 30 ஆண்டு காலமாக இந்தியாவில் குறிப்பாக சென்னையில் தொழில் செய்து வரும் நிறுவனத்துடன் லண்டனில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த கையெழுத்தை இங்கேயே போட்டிருக்கலாம்.
புதிய தலைமை செயலகம் அவசியம்தான். ஆனால் பட்டினப்பாக்கத்தில் மிகவும் நெரிசலான இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தவறான முடிவு. சென்னைக்கு வெளியே ஆயிரம் ஏக்கரில் நிர்வாக நகரம் அமைக்க வேண்டும்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று கூறினார்கள். இப்போது அதே இடத்தில் தொழிற்பேட்டை அமைந்தால் மட்டும் பாதிப்பு ஏற்படாதா? இந்த முரண்பாடான நிலைப்பாடு புரியவில்லை. பரந்தூரில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் அதை எதிர்த்துத் நானே களமிறங்கிப் போராடுவேன்.
அதிமுக, திமுக பிடிக்காமல் மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். எனவே பேரவையில் கடந்த காலத்தைப் பற்றி பேசாமல் நிகழ்காலம், எதிர் காலம் குறித்து பேச வேண்டும்" என்று கூறினார்.
PMK will not contest in TN byelection: Anbumani Ramadoss
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.