நீட் தேர்வு ரத்து! கணினி முறையில் நடத்த தேசிய தேர்வு முகமைக்கு என்னதான் பிரச்னை?
நீட் தேர்வு ரத்தான நிலையில் கணினி முறையில் நடத்த தேசிய தேர்வு முகமைக்கு என்னதான் பிரச்னை என்பது பற்றி..
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தலைப்புச் செய்தியாவது போலவே, நீட் தேர்வுக்குப் பின் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளும் தலைப்பில் இடம்பெறத் தவறுவதில்லை.
இத்தனைக்கும் ஜேஇஇ தேர்வை கணினி முறையில் சிறப்பாக நடத்தி வரும் தேசிய தேர்வு முகமை, ஏனோ எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வை மட்டும் வினாத்தாள் முறையில் நடத்தி, ஆண்டுதோறும் பல மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் செலவிட்டு வினாத்தாளை முன்கூட்டியே வாங்கி தேர்வெழுத வழிவகுத்து வருகிறது.
கடந்த ஆண்டுகளிலும் வினாத்தாள் கசிவு, மாணவர்கள், பெற்றோர்கள் கைது வரை சென்றது. வினாத்தாள் முறைகேடு காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
Advertisement
நீட் தோ்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிகழாண்டு மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.
இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான மக்களும் அவர்களது பெற்றோரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எப்படி கசிந்தது வினாத்தாள்? நீட் தேர்வுக்கு முன்பு கையால் எழுதப்பட்ட வினா-விடை வங்கி ஒன்று, உண்மையான தேர்வு வினாத்தாளில் இருந்த கிட்டத்தட்ட 100 கேள்விகளுக்கும் மேல் கொண்டிருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. மே 3ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் 42 மணி நேரத்துக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டேஹ்ராடூன், சிகர், ஜுன்ஜுனு பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் கைதாகியிருக்கிறார்கள். நீட் பயிற்சி மைய நிறுவனரும் இதில் கைதாகியிருக்கிறார். இந்த வினாத்தாள்கள் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் கேரள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவர் ஒருவர் சுருவில் உள்ள ஒருவருக்கு மே 1 ஆம் தேதி வினாத்தாளை அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு, அது பல மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.