ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!
தெம்மாங்கு பாடகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்று தவெக அரசு மீது அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தெம்மாங்கு பாடல்கள் பாடும் இரு இளைஞர்களை ஞாயிற்றுக்கிழமை 6 பேர் கொண்ட கும்பல், அவர்கள் தங்கியிருந்த வீடுகளுக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகினர்.
இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
அவருடைய பதிவில், “சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.