முகப்பு
தமிழ்நாடு

குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!

உயர் நீதிமன்றத்தில் முன்னாள் காவல் ஆணையர் அருண் காத்திருப்பது பற்றி...

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தனியார் கட்டுமான நிறுவனர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணர்வு வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் காத்துள்ளார்.

கொளத்தூர் ராமதாஸ் நகரில், தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு 2.10 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி, அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷர்மா ரூ. 43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் சந்தோஷ் ஷர்மா கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் ஷர்மா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களுடைய மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகளை கவனித்துக் கொள்வதற்கு சந்தோஷ் ஷர்மாவுக்கு பிணை வழங்க வேண்டும், குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சந்தோஷ் ஷர்மாவின் மனைவி கல்பனா ஷர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை அதிகாரி அருண் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள அருணுக்கு சம்மன் வழங்கச் சென்ற நீதிமன்ற அதிகாரி, பிற்பகல் 3.05 மணி முதல் 5.15 மணி வரை இரண்டு மணி நேரம் காத்திருக்கச் செய்து, பின்னர் சம்மன் பெறப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்ற அதிகாரியை காத்திருக்க வைத்த காவல்துறை அதிகாரி அருணின் ஊழியரை உடனடியாக நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஊழியர் ஆஜராகும் வரை காவல்துறை அதிகாரி அருணை நீதிமன்றத்தில் காத்திருக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

summary

Case Challenging the Repeal of the Goondas Act: Former Police Commissioner Arun Awaits at the High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.