சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவை நாளை தொடக்கி வைக்கப்படுகிறது.
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவையை முதல்வர் சி. ஜோசப் விஜய் நாளை(மே 29) தொடக்கி வைக்கிறார்.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதைச் செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இந்தப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணைக் காவல் கண்காணிப்பாளார்கள், 4 ஆய்வாளர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் முதல் கட்டமாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிரடிப்படையினர் பிற போலீஸாரிடமிருந்து தனித்துவமாக தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தப் படையினருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடையும் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி, பெல்ட், கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் என தயாராகி உள்ளது. மேலும் கருப்பு நிறத்தினாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான தொடக்க விழா நேற்று நடைபெறவிருந்த நிலையில், முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இதன் தொடக்க விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நாளை (மே 29) நடைபெறுகிறது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடக்கி வைக்கிறார். விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 30 ரோந்து வாகனங்கள் வழங்கப்படுகின்றன.