அதிமுக பட்டியிலிருந்து ஆடுகளைத் திருடும் தவெக: இன்பதுரை எம்.பி.
அதிமுகவிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையை தவெக செய்வதாக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை விமர்சனம்
அதிமுகவிலிருந்து தவெக ஆள் பிடிக்கும் வேலையைச் செய்வதாக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் இன்பதுரை எம்.பி. பேசியதாவது, "அதிமுகவில் 90 சதவிகிதத்தினர் வந்து விடுவர் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். தவெகவின் வெற்றி என்பது ஒரு மாயாஜால வெற்றி. அது முழுமையாக 8 மாவட்டங்களில் வெற்றிபெறவில்லை.
கிட்டத்தட்ட 48 தொகுதிகளில் மூன்றாவது இடம். தற்போது அதிமுகவிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.
Advertisement
Advertisement
அவர்களுக்கு போதிய எண்ணிக்கையில்லை. அவர்களுக்கு பலமில்லாததால், திமுக கூட்டணியிலிருந்து ஆள் தூக்கியிருக்கின்றனர்.
திமுகவும் அதற்குத் துணை நிற்பவர்களும் தீய சக்தி என்றும், அவர்களை (தவெக) தூய சக்தி என்றும் சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால், தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கை இல்லாததால், அவர்கள் அதிமுகவைத்தான் அழைத்திருக்க வேண்டும். திமுகவை வீழ்த்துவதுதானே இருவரின் நோக்கமும்.
அதிமுகவை வீழ்த்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட கட்சிதான் தவெக என தேர்தலுக்கு முன்னரே நான் கூறியிருந்தேன். அதனைத்தான் அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
உங்கள் கட்சியில் போதிய எண்ணிக்கை இல்லாததால், ஏன் அதிமுகவின் பட்டியிலிருந்து ஆடுகளைத் திருடுகிறீர்கள் என ஆதவ் அர்ஜுனாவை கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.