பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் தம்பிதுரை வலியுறுத்தல்
ஓசூரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை கலந்துகொண்டு பேசியது பற்றி...
ஓசூர்: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே நடத்த வேண்டும் என்று முன்னாள் மக்களவை துணைத் தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சருமான மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
ஓசூரில் நடைபெற்ற அதியமான் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தெரிவித்ததாவது:
காலதாமதமாகும் கலந்தாய்வு:
Advertisement
Advertisement
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதத்திலேயே வெளியிடப்பட்ட போதிலும், பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மருத்துவக் கலந்தாய்வை காரணம் காட்டி பொறியியல் கலந்தாய்வு தாமதப்படுத்தப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது.
தனியார் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள்: அரசு கலந்தாய்வு தாமதமாவதால், இடங்கள் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து விடுகின்றனர்.
காலியாகும் இடங்கள்: இதன் விளைவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் காலியாகும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அரசுகளுக்குக் கோரிக்கை: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்வி ஆண்டை ஆகஸ்ட் மாதத்திற்குள் முறையாகத் தொடங்க வேண்டும். எனவே, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மாணவர் சேர்க்கை நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, கலந்தாய்வை விரைந்து நடத்தி முடிக்க உரிய கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் பட்டங்களை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், உலகளாவிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தங்களுடைய தனித்திறன்களை (Skill Development) வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெளிநாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
Engineering counseling should be conducted earlier: Former Minister Thambidurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.