முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த அனுமதி
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பாக....
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிகாலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு, இந்த புகாரின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்குப்பதிவு செய்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் திமுக-வில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முந்தைய ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரியும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன், வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The Chennai Principal Sessions Court has ordered the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) to conduct a further investigation in the corruption case against former minister Vaithilingam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.