FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை...

4 செப்டம்பர் 2026, 1:15 pm IST
தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - x / N anand
பகிர்:

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தினால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

Advertisement

அப்போது அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், "உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நியாயமானது தான். முந்தைய ஆட்சியில் கஜானாவையே காலி செய்துவிட்டு போய்விட்டார்கள். ஆனால் எல்லாத்தையும் சரி செய்து முதல்வர் விஜய் உங்களுக்கு செய்து கொடுப்பார்"என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு தேவையானதை செய்து தருவோம். கடந்த ஆட்சிகளில் போராட்டம் பண்ண விடமாட்டார்கள். இரவோடு இரவாக தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

நம் முதல்வர் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானதை செய்வார். நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல்வர் வருத்தப்பட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம், இது உங்கள் ஆட்சி. எப்போது வேண்டுமானால் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். எங்கள் அலுவலக கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும், அதுதான் எங்கள் கோரிக்கை.

நீங்கள் இங்கு இருக்கும்போது எங்களுக்கு தூக்கம் வருவதில்லை, குறிப்பாக எங்கள் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு முறை எங்களைப் பார்க்கும்போது எதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இங்கு போராட்டத்தில் ஈடுபடும் யார் மீதும் கை வைக்கவோ, மிரட்டவோ கூடாது என முதல்வர் கூறினார்" என்று பேசினார்.

அமைச்சர் ராஜ்மோகன், "போன ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் உண்மையில் கஜானாவையே காணவில்லை. இருந்தாலும் முதல்வர் விஜய் அனைத்தையும் செய்து கொடுப்பார்" என்றார்.

summary

The treasury is empty; the Chief Minister is losing sleep: Ministers hold talks with sanitation workers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments