22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு
திருக்குறளை இந்திய மொழிகளில் எளிதாக அணுகும் வகையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் "திருக்குறள் பன்மொழிச்செயலி' (Tirukkural Multilingual) என்ற புதிய செயலியை புதன்கிழமை (செப். 9) வெளியிடுகிறது.
திருக்குறளை இந்திய மொழிகளில் எளிதாக அணுகும் வகையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் "திருக்குறள் பன்மொழிச்செயலி' (Tirukkural Multilingual) என்ற புதிய செயலியை புதன்கிழமை (செப். 9) வெளியிடுகிறது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திருவள்ளுவர் அரங்கத்தில் புதன்கிழமை (செப். 9) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், கர்நாடகத்தைச் சேர்ந்த இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் பசவராஜா கொடகுந்தி கலந்து கொண்டு இந்தச் செயலியை வெளியிடுகிறார்.
இதில், தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன், பதிவாளர் ரெ.புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 22 மொழிகளில் வெளியிடப்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்புகள் ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒரே குறளைத் தமிழ் உள்ளிட்ட வெவ்வேறு இந்திய மொழிகளில் ஒரே திரையில் ஒப்பிட்டுப் படிக்க முடியும்.
Advertisement
Advertisement
மேலும், திருக்குறளின் 1,330 குறட்பாக்களுக்கும் தமிழ் சிறப்புரை, ஆங்கில உரைநடை, சொல் இலக்கண விளக்கம், ஒவ்வொரு அடியின் யாப்பமைப்பு உள்ளிட்ட ஆய்வு மற்றும் கற்றல் வளங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. முதல் 100 அதிகாரங்களில் இடம்பெறும் குறட்பாக்களுக்குத் தொடர்புடைய ஓலைச்சுவடி வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அறிதிறன்பேசியில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, இணைய வசதி இல்லாமலும் செயல்படும். முற்றிலும் இலவசமாகவும், விளம்பரங்களின்றியும் வழங்கப்படும் இச்செயலியின் உள்ளடக்கங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மொழிகளைக் கடந்து திருக்குறளின் அறநெறிச் சிந்தனைகளைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பதே இந்தச் செயலியின் முக்கிய நோக்கமாகும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.