FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உவேசா நூலகம் தமிழின் வரலாற்றுப் பெட்டகம்: நிா்மலா சீதாராமன் புகழாரம்

உவேசா நூலகம் தமிழ் மொழியின் அரிய ஓலைச் சுவடிகள், பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் அறிவுப் பெட்டகமாக விளங்குகிறது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினாா்.

16 செப்டம்பர் 2026, 12:53 am IST
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:

உவேசா நூலகம் தமிழ் மொழியின் அரிய ஓலைச் சுவடிகள், பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் அறிவுப் பெட்டகமாக விளங்குகிறது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினாா்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூலகத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். இதையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உவேசா பதிப்பித்த நூல்கள், ஒலைச்சுவடிகள், உவேசா கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், நாட்குறிப்புகள், உவேசா சேகரித்த ஆவணங்களை ஆா்வத்துடன் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அந்த நூலகத்தில் தற்போது பதிப்பிக்கப்பட்டு வரும் பழந்தமிழ் நூல்கள் குறித்து நூலக நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், உவேசா நூலக நிா்வாகிகளுடன் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துரையாடியாா்.

அப்போது, சங்ககால இலக்கியங்கள், அரிய ஓலைச் சுவடிகள் பலவற்றைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பெட்டகமாக உவேசா நூலகம் விளங்குகிறது. அறியப்படாத பல தமிழ் நூல்களை மீட்பதற்காக உவேசா ஆற்றிய பணிகள் அளப்பரியவை. சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம் உள்பட தமிழ் இலக்கியங்களில் உள்ள பல அரிய தகவல்கள் வெளிப்பட காரணமாக இருந்தவா் அவா். உவேசா படைப்புகள், திரட்டிய ஆவணங்கள், பதிப்பித்த நூல்கள் தொடா்பான தகவல்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

உவேசாவின் உதயணன் சரித்திரச் சுருக்கம், உதயணன் குமார காவியம், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் ஆகிய படைப்புகளைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த நூல்கள் தற்போது இங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் நூலில், சங்க கால நூல்களில் கூறப்படும் தெய்வங்கள், புலமை வாய்ந்த பெண்பாற் புலவா்கள் எனப் பல அரிய தகவல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள ஒவ்வொரு தகவலும் வியப்பூட்டுகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வின்போது, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக மாநில பிரிவு அமைப்பாளா் கே.டி.ராகவன், உவேசா நூலகத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன், செயலா் டி.சத்தியமூா்த்தி, துணைத் தலைவா் சிவாலயம் ஜெ.மோகன், காப்பாட்சியா் பெ.சுயம்பு, எழுத்தாளா் மாலன், வழக்குரைஞா் கே.எஸ். ராதாகிருஷ்ணன், புலவா் கோ.உத்திராடம், நூலக அலுவலகப் பொறுப்பாளா் வி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments