பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பதில்...
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் விநியோகப் பிரிவில் பணியாற்றும் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் மின் கொள்முதல், பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்,
"மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. என்னுடைய குடும்பத்தினருக்குக்கூட அனுமதிச்சீட்டு நான் வழங்கவில்லை. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதால் வழக்கம்போல திமுகவைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
மின்சாரப் பற்றாக்குறையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறோம். பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 16 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இதே மாதிரியான மின்சார தட்டுப்பாடு எல்லா மாநிலங்களும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இல்லை.
கேரளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அவர்களால் கொள்முதல் செய்ய முடியாமல் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிப்பு செய்து மின்சாரத்தை துண்டித்து இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் பற்றாக்குறையை சரி செய்வதற்கு பொதுத் தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்திருக்கிறோம். மின்னகத்தில் வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான புகார்கள் இருக்கிறது என்பது குறித்து குழு அமைத்து கண்காணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மின்சாரப் பற்றாக்குறையை போக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த மாத இறுதியில்தான் காற்றாலை மின்சாரம் முடிவடையும். ஆனால் இந்த மாதம் தொடங்கிய உடனே அது முடிவடைந்துவிட்டது. தற்போது அக்டோபர் மாதத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
டிடிவி தினகரன் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். மிசாவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? 10 வருடம் முற்றிலுமாக ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனின் இத்தகைய வளர்ச்சிக்கு அவரது சித்திதான் காரணம். அவரையே ஒதுக்கி வைத்தவர்தான் டிடிவி தினகரன். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் முன்பு ஒரு மாதிரியும் தற்போது ஒரு மாதிரியும் மாற்றி மாற்றி பேசக்கூடிய நபர்.
துரோகி பழனிசாமியை வீழ்த்துவது தான் ஒரே நோக்கம் என்று சொன்னவர் டிடிவி தினகரன். இன்றைக்கு அவரை முதல்வர் ஆக்குவதற்கு பேப்பரை தூக்கிக்கொண்டு கவர்னர் மாளிகை வரை சென்றார்
யார் முதல்வர் ஆகப்போகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர் கடிதத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் பழனிசாமிக்காக இவர் தூக்கி கொண்டு செல்கிறார். அப்படிப்பட்டவர் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்.
முதல்வரின் பயணம் வெளிப்படையானது. மக்களுக்கான பயணம். இது தொடர்பாக முதல்வர் தனித்தனியாக துறை ரீதியாக விளக்கி கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
Minister Nirmal kumar explain about powercut in tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.