FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என தவெக அரசு செயல்படுகிறது! - பெ. சண்முகம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...

19 செப்டம்பர் 2026, 12:47 pm IST
முதல்வர் விஜய் - சிபிஎம் ஆர்ப்பாட்டம் - கோப்புப் படம் | Instagram
பகிர்:

சென்னைப் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் ரூ. 1,200 கோடியில் சென்னைப் பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகவும், தமிழக அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் எனக் கூறி அப்பகுதிவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி மாநிலச் செயலர் பெ. சண்முகம் தலைமையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (செப். 19) ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பேசியதாவது:

“இது சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி என்பது இன்றைய முதல்வருக்குத் தெரியுமா தெரியாதா எனத் தெரியவில்லை. ஆனால், அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அவர்கள் நிவாரணப் பணிகளில் எல்லாம் தொடர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். ஆகையால், இந்தப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் மிகவும் மோசமானது. யாராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுனாமியே வராது எனும் முடிவுக்கு தமிழக அரசு வந்துவிட்டதா எனத் தெரியவில்லை. இந்த யோசனையைச் சொன்னது யாராக இருந்தாலும் அது ஏற்கத்தக்கது இல்லை.

அதேபோல், பல்வேறு தலைவர்கள் சொல்வது போல நிர்வாக நகரத்தைப் பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைக்கும் திட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. சென்னை நகரத்துக்குள்ளேயே புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன. தமிழக அரசுக்குச் சொந்தமான கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ஏரத்தாள 160 எக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு 4 சட்டப்பேரவைகளைக் கூட கட்டமுடியும்.

ஒருவேளை சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும் எனும் யோசனை எதாவது தவெக அரசுக்கு இருந்தால் அதைவிட சிறந்த இடம் வேறு இருக்காது. அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது அந்த இடம் மிகப் பெரிய இடம் அங்கு யாரையும் அப்புறப்படுத்த வேண்டியதில்லை. அங்கு வேண்டுமானாலும் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டிக்கொள்ளலாம்.

எனவே, இதுபோன்ற மாற்று வழிகளை ஆராய்வதைத் தவிர்த்து தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று யார் என்ன யோசனைகளைச் சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம். எவ்வளவு நியாயமான ஆலோசனையாக இருந்தாலும் அதை ஏற்க மாட்டோம் எனும் அணுகுமுறையைதான் அது வெளிப்படுத்துகிறது. ஆகவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை 564-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

summary

Members of the CPI (Marxist) are staging a protest against the construction of the new Secretariat at Pattinapakkam in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments