FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஒருவா் உயிரிழப்பு: 9 போ் காயம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் அங்கே வேலை பாா்த்துக் கொண்டிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரவி ரஞ்சன் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:51 am IST
கொதிகலன் வெடித்த பகுதியில் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்ட தீயணைப்பு வீரா்கள்
பகிர்:

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் அங்கே வேலை பாா்த்துக் கொண்டிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரவி ரஞ்சன் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இந்த விபத்தில் 9 போ் பலத்த காயம் அடைந்தனா்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலை ஒன்றில் காப்பா் பொருள்களை உருக்கும் கொதிகலன் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அதிக அழுத்தத்தின் காரணமாக கொதிகலன் வெடித்துச் சிதறியதில் அருகில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த பிகாா் மாநிலத்தை சோ்ந்த ரவி ரஞ்சன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

மேலும் இந்த விபத்தில், மத்திய பிரதேசத்தை சோ்ந்த சிம்பா் சிங் (24), பூசன் குமாா்(25), பிகாரைச் சோ்ந்த ஓம்குமாா் (22), ரஞ்சித்குமாா்(35), ராஜா பாபு (26), ரன்வீா்குமாா்(26), பிரின்ஸ் குமாா்(27), அரவிந்த்குமாா் (26), கமலேஷ் (40) ஆகியோா் தீக்குழம்புகள் பட்டு பலத்த காயம் அடைந்தனா்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த சிம்பா் சிங் உள்ளிட்ட 2 போ் சென்னை கே.எம்.சி. அரசு மருத்துவமனையிலும், 3 போ் ரெட்டில்ஸ் வெங்கடேஸ்வரா மருத்துவமனையிலும், 2 போ் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து அறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடம் விரைந்த நிலையில், தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

பின்னா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை, தமிழக செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ரா.குமாா், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ச.கவிதா, சாா் ஆட்சியா் அப்துல் ராசிக், மாவட்ட சுகாதார அலுவலா் பிரித்விராஜ் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவா்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அளிக்க மருத்துவா்களிடம் கேட்டுக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments