முகப்பு
வணிகம்

நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

சென்செக்ஸ் 193.42 புள்ளிகள் உயர்ந்து 83,432.89 புள்ளிகளாகவும் நிஃப்டி 55.70 புள்ளிகள் உயர்ந்து 25,461 ஆக நிலைபெற்றது.

Updated On : 4 ஜூலை 2025, 6:12 pm IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

மும்பை: வங்கிப் பங்குகளில் கொள்முதல் மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான நிலையில் முடிவில் உயர்ந்து முடிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் நிலையற்ற தன்மைக்கு மத்தியில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 83,477.86 மற்றும் குறைந்தபட்சமாக 83,015.83 ஐ எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 193.42 புள்ளிகள் உயர்ந்து 83,432.89 புள்ளிகளாகவும் 50 பங்குகள் கொண்ட நிஃப்டி 55.70 புள்ளிகள் உயர்ந்து 25,461 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, எச்.சி.எல் டெக், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் டிரென்ட், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா மற்றும் மாருதி ஆகியவை சரிந்து முடிந்தன.

Advertisement

Advertisement

பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் சுமார் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்புள்ள மூலதன கையகப்படுத்தல் திட்டங்களை அங்கீகரித்த பிறகு பராஸ் டிஃபென்ஸ் நிறுவன பங்குகள் 10% உயர்ந்தன.

2025 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிற்கான வணிக புதுப்பிப்பு முதலீட்டாளர்களைக் கவர்ந்ததால் எஃப்எம்சிஜி நிறுவனமான மாரிகோ நிறுவன பங்குகள் 2% உயர்ந்தன.

கிரெடிட் அக்சஸ் கிராமீன் பங்குகள் கிட்டத்தட்ட 3% அதிகப்பு.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் இயற்கை எரிவாயு குழாய் வரி விதிமுறைகள் 2025ல் சீர்திருத்தங்களை அங்கீகரித்ததால், இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் மகாநகர் கேஸ் லிமிடெட் ஆகிய பங்குகள் 3.5% வரை உயர்ந்து முடிந்தன.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான தேவை காரணமாக நிறுவனத்தின் வருவாய் சுமார் 80% வளர்ச்சியை அடைந்தததால் பிசி ஜூவல்லர் நிறுவனத்தின் பங்கு விலை 20% உயர்வு.

சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜேன் ஸ்ட்ரீட் குழுமத்தை பத்திரச் சந்தைகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிற்கான வணிக புதுப்பிப்பை வெளியிட்ட பிறகு, ஜூடியோ மற்றும் வெஸ்ட்சைடு ஆபரேட்டர் நிறுவன பங்குகள் 11% க்கும் அதிகமாக சரிந்தன.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட 2 நாட்களில் குறிப்பிடத்தக்க லாபத்தை பதிவு செய்த பிறகு, எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் இன்று 2% சரிந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்த நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகளும் சரிந்து முடிந்த வேளையில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய கலவையான குறிப்புகளுடன் வரவிருக்கும் அமெரிக்க கட்டண காலக்கெடுவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு உத்தியைக் கடைப்பிடிப்பதால் இந்திய சந்தை இன்று ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.03 சதவிகிதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 68.03 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ரூ.1,481.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,333.06 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: கடனை முன்கூட்டியே செலுத்தினால் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ

summary

Sensex over 193 points to close at 83,433. Nifty gained 56 points to end at 25,461.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.