பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பங்குச் சந்தை எழுச்சி; நிஃப்டி 348, சென்செக்ஸ் 1,186.77 புள்ளிகள் உயர்வு!
சென்செக்ஸ் குறியீடு 1,186.77 புள்ளிகள் உயர்ந்து 73,134.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 348 புள்ளிகள் உயர்ந்து 22,679.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றங்கள் தணியத் தொடங்கியதற்கான அறிகுறிகளின் ஆதரவுடன், இந்தியப் பங்குச் சந்தை தனது இரண்டு நாள் சரிவுப் போக்கை முடித்து கொண்டு, புதிய வர்த்தகத் தொடரின் முதல் அமர்வை உயர்வுடன் நிறைவு செய்தன.
இந்திய பங்குச் சந்தையானது, புதிய நிதியாண்டின் (ஏப்ரல் 01), முதல் பல்வேறு துறைகளில், பரவலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், நிஃப்டி குறியீடு 22,900 புள்ளிகள் என்று உயர்ந்த நிலையில் தொடங்கி, வர்த்தக நேரத்தின் இடையில் லாபப் பதிவு இருந்த போதிலும், வலுவான நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் குறியீடு 1,186.77 புள்ளிகள் உயர்ந்து 73,134.32 புள்ளிகளாகவும், நிஃப்டி குறியீடு 348 புள்ளிகள் உயர்ந்து 22,679.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
இன்று பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட்டன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 2.2 சதவீதமும், ஸ்மால்-கேப் குறியீடு 3.3 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், திங்கள்கிழமை பதிவான ரூ.412.41 லட்சம் கோடியிலிருந்து, சுமார் ரூ.10 லட்சம் கோடி உயர்ந்து ரூ.422.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
சென்செக்ஸில் ட்ரென்ட், இன்டர்குளோப் ஏவியேஷன், அதானி போர்ட்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் எட்டர்னல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, சன் பார்மா, பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் இன்டர்குளோப் ஏவியேஷன், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ட்ரெண்ட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், எச்.டி.எஃப்.சி. லைஃப், சிப்லா, என்.டி.பி.சி., சன் பார்மா ஆகிய பங்குகள் சரிந்தன.
மருந்துத் துறை 1% சரிந்த நிலையில், மற்ற அனைத்துத் துறைசார் குறியீடுகளும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதில் பாதுகாப்புத் துறை குறியீடு 5 சதவீதக்கும் அதிகமாகவும், மூலதனப் பொருட்கள், ஊடகம் மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகள் தலா 3 சதவீதம் உயர்ந்தன. அதே சமயம் ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உலோகம், ரியல் எஸ்டேட், எப்எம்சிஜி, தொலைத்தொடர்பு மற்றும் தனியார் வங்கித் துறை குறியீடுகள் தலா 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
முன்னாள் நிர்வாகியான வில்லி வால்ஷ், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ) நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் உயர்ந்தன. என்டிபிசி நிறுவனத்திடமிருந்து ரூ. 494.5 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றதன் விளைவாக பேஸ் டிஜிடெக் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன. 2027 நிதியாண்டில் சுமார் 40 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளதால், ஜாகில் ப்ரீபெய்ட் ஓஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம் உயர்ந்தன.
ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகிய குறியீடுகள் கணிசமாக உயர்தன.
கோஸ்பி குறியீடு 8.44 சதவீதம் உயர்ந்த நிலையில், நிக்கி 225 குறியீடு 5.24 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இதனை தொடர்ந்து, ஐரோப்பியச் சந்தைகளும் உயர்ந்து வர்த்தகமானது.
தரவுகளின் அடிப்படையில், நேற்று (திங்கள்கிழமை) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 11,163.06 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 14,894.72 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ப்ளூ ஸ்டார், என்.டி.பி.சி. லைஃப், சிப்லா, ஹேவெல்ஸ் இந்தியா, எஸ்பிஐ கார்டு மற்றும் ப்ளூ டார்ட் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இன்று மும்பை பங்குச் சந்தைில் 52 வாரம் இல்லாத அளவு குறைந்தபட்ச விலையை எட்டியது.
கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் சந்தையின் நம்பிக்கையை வெகுவாக வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.22 சதவீதம் சரிந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 103.7 அமெரிக்க டாலராக நிலைபெற்றது.
The Indian equity market snapped its two-day losing streak and ended on a strong note.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.