கச்சா எண்ணெய் இறக்குமதி: நாட்டின் பொருளாதார பலவீனம்! எச்டிஎஃப்சி
இந்தியா, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது நாட்டின் பொருளாதாரத்துக்கு பலவீனமாக உள்ளது என எச்டிஎஃப்சி முதன்மை ஆராய்ச்சி தலைவர் தெரிவித்தது குறித்து...
இந்தியா, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது நாட்டின் பொருளாதாரத்துக்கு பலவீனமாக உள்ளது என எச்டிஎஃப்சி முதன்மை ஆராய்ச்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் தொடர்பாக டிரம்ப் ஆற்றிய உரை, இந்திய பங்குச்சந்தையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சி தலைவர் தேவர்ஷ் வகீல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்கா போரின் இலக்கை ஏறக்குறைய அடைந்துவிட்டதாகவும், 2 முதல் 3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றியுள்ளார். 2 முதல் 3 வாரங்களில் அதை அவர் செய்து முடிப்பார் என நான் நம்புகிறேன். அவர் ஆற்றிய உரையின் விளைவாக எரிசக்தித் துறையில் கச்சா எண்ணெய்யின் விலை 4 சதவிகிதம் உயர்வைக் கண்டதோடு இந்திய பங்குச்சந்தையும் சரிவைக் கண்டுள்ளது.
இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் நிலையற்ற மனநிலையைக் கொண்டுள்ளனர். இதனால், இந்திய பங்குச்சந்தை அதிக அளவிலான விற்பனைகளைச் சந்தித்துள்ளன.
கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பலவீனமாக உள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு பணவீக்கத்தின் மீது அழுத்தம் உண்டாகிறது.
ஹோர்முஸ் நீரிணை சீர்குலைவு, அண்மைக் காலங்களில் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மிக முக்கியமான அதிர்ச்சிகளில் ஒன்றாகும். பங்குகள் குறைந்த மதிப்பில் கிடைக்கின்றன. மதிப்பீடுகள் குறையும் என்று காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும், பங்குகளின் நுழைவுப் புள்ளிக்காகக் காத்திருப்பவர்களுக்கும் முதலீட்டு வாய்ப்புகளைத் திரட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக நான் எண்ணுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்தியா, தன்னுடைய மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதி செய்து வருகிறது. பழைய எண்ணெய்க் கிணறுகளின் திறன் குறைதல், இயற்கையாகக் கிடைக்கும் எரிபொருளின் இருப்பு குறைவு, கச்சா எண்ணெய் உற்பதிக்கு ஆகும் செலவுகள் மற்றும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மலிவான விலை போன்ற காரணங்களால் நாட்டில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் 10 முதல் 20 சதவிகிதம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.