வாட்ஸ்ஆப், முகநூல்... சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!
2025-ல் மட்டும் சமூக வலைதள செயலிகள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து...
2025-ல் மட்டும் சமூக வலைதள செயலிகள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதேவேளையில், அதிக எண்ணிக்கையிலான மோசடிகள் தொடங்கும் இடமாகவும் சமூக வலைதளங்கள் மாறியுள்ளன.
கூட்டாட்சி வணிக ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் சமூக வலைதளங்கள் மூலம் 2.1 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 1.89 லட்சம் கோடி.
Advertisement
இந்த இணைய வழி மோசடிகள் படிப்படியாக அதிகரித்து தற்போது உச்சத்தை அடைந்துள்ளதாகவும், அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் இவை அரங்கேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்களின் கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன.
மோசடி எங்கிருந்து தொடங்குகிறது?
கூட்டாட்சி வணிக ஆணைய தரவுகளின்படி, 30% மக்கள் இணைய வழியில் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இதில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை அடிக்கடி இந்த மோசடி பட்டியலில் இடம்பெறுகின்றன.
இவற்றில் அதிக அளவாக முகநூல் மோசடியில் மக்கள் சிக்குகின்றனர். அவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் மோசடிக்கான வலை விரிக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வெளிப்படையான வழியில் இந்த மோசடிகள் நடைபெறுவதில்லை. சில நேரங்களில் விளம்பரங்கள், குறுஞ்செய்தி லிங்குகள், ஏன்? தெரிந்த சமூகவலைதள கணக்கை முடக்குவதன் மூலமும் அரங்கேறுகிறது.
மக்கள் ஏமாறும் மோசடிகளின் வகைகள்
ஷாப்பிங் மூலம் நடைபெறும் மோசடி மிகவும் பொதுவாகவே நடக்கின்றன. விலை குறைவாக இருக்கும் பொருளுக்கான விளம்பரத்தை பார்த்துவிட்டு, அதனை இணையத்தில் ஆர்டர் செய்வது வழக்கம். ஆனால், பெறும்போது மாறுபட்ட வேறு ஏதேனும் ஏமாற்றக்கூடிய வகையிலான பொருள்கள் அனுப்பப்படும். இந்த இணையதள முகவரி பார்ப்பதற்கு அசலானதைப்போன்றே இருக்கும்.
இரண்டாவது முதலீட்டு மோசடிகள். இதுபோன்ற முதலீட்டு மோசடியின் மூலம் 1.1 பில்லியன் டாலர் மோசடி நடந்துள்ளது. முதலீடுகளைக் கற்றுக்கொள்வது, எளிய வழிமுறையில் லாபம் ஈட்டுவது போன்ற பதிவுகள் மூலம் இந்த மோசடிகள் நடக்கின்றன. சில குழுக்கள், பொய்யான வெற்றிக் கதைகளை சித்தரித்து, குழுக்களை உருவாக்கியும் மோசடி செய்யப்படுகிறது.
மூன்றாவது போலி காதல் மோசடிகளும் இதில் இணைந்துள்ளன. சமூக வலைதளங்களில் நட்பாக அறிமுகமாகி காதலாக வளர்ந்த பிறகு அவர்களிடம் உரிமையுடன் பணம் கேட்பதன் மூலம் இத்தகைய மோசடிகள் நடக்கின்றன. பொதுவாக இவர்கள் தங்கள் உண்மையான பெயர்கள், புகைப்படங்களை பயன்படுத்தமாட்டார்கள்.